Sunday, November 20, 2011

வரலாறு ரொம்ப முக்கியம் தம்பி

கடந்த விடுமுறையின் போது ஊருக்கு போயிருந்தேன், வந்தவுடனேயே மச்சான் மைக்கல் கிரௌண்ட்ல மேட்ச் ஒன்று  இருக்கடா எண்டு கூட்டு ஒன்று  கேட்க மறு கேள்வி இல்லாமல் பைக்ல ஏறினேன்... நெல்லியடி வதிரி ரோட்டால போகும் போது ஏதோ வித்தியாசமான மாற்றம் .. என்ன என்று கொஞ்ச நேரம் தெரியவில்லை பிறகுதான் நினைவுக்கு வந்தது இதில எல்லோ மில்லர் இடிச்ச கட்டிடம் இருந்ததெல்லோ எண்டு...


நெல்லியடி சென்றல் எண்டு எல்லோராலும் அழைக்கப்படும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் முன்றலில் இருந்த சிதைந்த கட்டிடம் முற்றாக இடிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டிருந்தது. ஏதோ மனசை பிசைய என்ன மச்சி கட்டிடம் இடிசிட்டங்களா? ஒரு நியூஸ் உம் வரலேயேடா என்று கேட்க.. ஓமடா திடீரென்று இடிச்சுபோட்டான்கள் அப்பிடியே தெரிஞ்சும் என்ன செய்யிறது என்றான் ..  ஏண்டா ஒருத்தரும் எதிர்க்கேல்லையே நாங்க ஹாட்லில படிக்கேக்க எவ்வளவு Strike பண்ணினோம் ஒருக்கா மாவீரர் நாள் கொடியை அறுத்து போட்டாங்கள் ஆர்மி எண்டு சொல்லி அவங்கட காம்ப்க்கு  முன்னாலேயே நின்று Strike பண்ணினமேடா என்றேன்.அவன் அதுக்கு  ஏண்டா மிச்சமா இருக்கிறவங்களும் உயிரோட இருக்கிறது விருப்பமில்லையா என்றான்.... 

எனக்கும்  என் இயலாமை புரிந்தும் ஏற்கமுடியவில்லை. எமது பிரதேசத்தின்  வரலாறு ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாண   நூலகத்திலிருந்து மில்லர் கட்டடம் வரை ஒன்றும் மிச்சமில்லை .... இப்பவே கொழும்பில் வசிக்கும் எனது சித்தியின் மகள் பிரபாகரன் என்றால் யார் என்று கேட்கிறாள்? அவளுக்கே என்னால் சரியாய்  புரியவைக்க முடியவில்லை இந்த நிலைமையில் என் பிள்ளைக்கு எதை காட்டி புரிய வைப்பது?
அந்த கட்டிடம் இருந்தாலாவது அடுத்த சந்ததி ஏன் இந்த கட்டிடம் இடிந்து போய் உள்ளது அதை ஏன் இன்றும் அப்படியே வைத்திருக்கிறார்கள் என்று கேட்கும் போது விளக்க "நாம் இப்படிதான் போரிட்டோம்" , "மண்ணின் பெருமை" என்றெலாம் அடித்து விடலாம் என எண்ணி இருந்தேன் . வன்னியில் 2 லட்சம் பேர் சாகும்போது வெளியே இருந்து பார்த்து கொண்டிருந்த 30 லட்சம் பேரில் நீயும் ஒருவன்தானே என்று கேட்பது எனக்கு கேட்கிறது.... அதெல்லாம் சொல்லும் போது வரலாற்றை லைட் ஆ மாத்தலாம் பாஸ்...(ஓ இததான் வரலாற்றுப்பிழை எண்டு சொல்லுவாங்களோ..). 

ஒருவாறாக கிரௌன்ட்டுக்கு போய்ட்டோம். எனக்கு இருப்பு கொள்ளவில்லை என் நல்ல காலமோ அவரின் கெட்ட காலமோ அந்த பாடசாலையில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரை சந்திக்க நேர்ந்தது . அவர் அப் பாடசாலையின் தீவிர விசுவாசி அவரிடம் கேட்டேன் என்ன நடந்தது என்று .
அவர்கள் புதிதாக கட்டட திறப்பு விழா ஒன்று நடத்தியிருக்கிறார்கள் அதற்கு பிரதம விருந்தினர் கவர்னர் அவர்கள் . அவர் விழாவிற்கு வரும் போது அக் கட்டிடம் அவரை கொஞ்சம் உறுத்தியிருகிறதாக்கும் ஆதலால் அவர் இந்த அழகான பாடசாலையில் அசிங்கமாக ஒரு இடிந்த கட்டடம் உங்களுக்காக நான் இந்த கட்டடத்துக்கு  பதிலாக புதிய கட்டடம் ஒன்றை அமைத்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் இதனால் மகிழ்வுற்ற 
பாடசாலை சமூகம் கரவொலி செய்து அவரை வழி அனுப்பி வைத்தது. அவர் போய் இரண்டு நாட்களில் கட்டடம் இடிக்க பட்டுவிட்டதாம்.  பெரும்பான்மை இனத்துக்கு இருக்கிற உணர்வு நமக்கு  இல்லையோ.. அல்லது எவ்வளவோ போய்ட்டுது இனி என்ன போய் என்ன என்று விட்டிட்டமோ தெரியேல்லை...

சரி நமக்கு அதை பற்றி என்ன விசயத்துக்கு வாறன் மேட்ச் தொடங்க  போகுது....   
இறங்கிறோம், கலக்கிறோம், ஜெயிக்கிறோம்.

4 comments:

  1. இந்த தளத்தில் பல நல்ல பதிவுகள் வெளிவர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. .. இப்பவே கொழும்பில் வசிக்கும் எனது சித்தியின் மகள் பிரபாகரன் என்றால் யார் என்று கேட்கிறாள்? .......

    ம்.என்னெவென்று சொல்ல?

    ReplyDelete
  3. நிறைய எழுதுங்க! கலக்குங்க பாஸ்!

    ReplyDelete